சென்னை சட்டக் கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநில நிர்வாகம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால் மாநில நிர்வாகம் எதுவும் பின்னுக்கு தள்ளப்படவில்லை. மருத்துவமனையிலே இருந்த போதே, அன்றாடம் நிதித்துறை செயலாளரை அழைத்து நிதிநிலை அறிக்கை தயாரிக்க நிதி அமைச்சருக்கு உதவியவன்.
ஆம்புலன்ஸ் வண்டியிலேயே வந்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று மருத்துவமனையில் படுத்துக் கொண்டே கடிதம் எழுதினேன். சக்கர வண்டியிலே அமர்ந்தவாறு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டவன் நான்.
சிவகங்கையிலே மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல்- பாடியிலே மேம்பாலம்- தாமிரபரணி-கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டம்- 3 ஜி ஸ்பெக்ட்ரம் தொடக்கம் போன்றவைகள் எல்லாம் முதுகுவலியோடு மருத்துவமனையிலே நான் தொடங்கி வைத்த திட்டங்கள். எனவே, மாநில நிர்வாகம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடவில்லை.
நவம்பர் மாதத்தில் இருந்து 4 மாதங்களாக மூடிக்கிடப்பதாக அறிக்கையில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அதுவும் தவறான தகவல். நவம்பரில் மூடப்பட்ட கல்லூரி டிசம்பர் 10ஆம் தேதி திறக்கப்பட்டது. அதன் பின் தேர்வுகள் எல்லாம் நடைபெற்று முடிந்ததும், பொங்கல் கால விடுமுறை விடப்பட்டது.
பொங்கலுக்கு பின் ஜனவரி 19 அன்று சட்டக்கல்லூரி திறந்து அந்த மாதம் முழுவதும் கல்லூரி முறையாக நடைபெற்றது. ஜனவரி 31ஆம் தேதி இலங்கை தமிழர் பிரச்சனைக்காக அனைத்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்த போது- சட்டக் கல்லூரி மாத்திரமல்லாமல், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன.
அதற்கு பிறகு கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திறக்கப்படாமல் இருந்த சட்டக் கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.