எதிர்ப்பு கருத்துக்களை எப்போதும் ஊக்கப்படுத்த வேண்டும்.. அதுவே நாட்டை நல்வழிப்படுத்த உதவும் என்றும் அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது. என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், என்ஆர்சிக்கு எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சூழலில் அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரைக் குத்தக்கூடாது என்றும் எந்த ஒரு விஷயத்திலும் எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும், அது வன்முறையாக மாறாத வரை அதை தடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்றும் நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக ‘ ஜனநாயகமும் எதிர்ப்புணர்வும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை (இன்று) நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்

தேர்தலில் ஒரு கட்சி 51 % வாக்குகளை பெற்றுள்ளது என்றால் மீதமுள்ள 49% மக்களும் அடுத்த ஐந்து ஆண்டு காலம் எதுவுமே பேசக் கூடாது என்று அர்த்தம் இல்லை.. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜனநாயகத்தில் பங்கு இருக்கிறது அரசுகள் எப்போதுமே சரியாக இருப்பது இல்லை. நாம் அனைவரும் தவறு செய்கிறோம், எதிர்ப்புகள் வன்முறையாக மாறாத வரை அரசுகளுக்கு அதை தடுக்க உரிமையில்லை.

கேள்வி எழுப்புவது உரிமை ஒரு விஷயத்தில் நீங்கள் மாறுபட்ட கருத்து கொண்டிருப்பதால் நீங்கள் நாட்டை அவமரியாதை செய்வதாக அர்த்தம் கிடையாது. மாறுபட்ட சிந்தனைகள் உதிக்கும்போதே அங்கு எதிர்ப்புணர்வு நிச்சயம் உண்டாகும். கேள்வி எழுப்புவது என்பது ஜனநாயகத்தின் வழிவந்த உரிமையாகும்.அமைதியான வழிகளை கடைபிடிக்கும் வரை எதிர்க்கட்சிகளுக்கு எப்போதுமே போராடுவதற்கு உரிமை உள்ளது.