அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கவல்ல, “அக்னி-3′ ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை, 3,500 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கவல்லது.உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரான இந்த ஏவுகணை, தரையில் ஒரு இடத்தில் இருந்து புறப் பட்டு, மற்றொரு இடத் தில் உள்ள இலக்கை தாக்கவல்லது.ஒரிசாவின் பாலசூரில் உள்ள வீலர் ஐலண்ட் தமரா என்ற இடத்தில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலம் செலுத்தப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக, பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “அக்னி-3′ வரிசையில் இது நான்காவது ஏவுகணை சோதனை.இந்த ஏவுகணையானது 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும், 50 டன் எடையும் கொண்டது. நேர்த்தியான வகையில் தோன்றும் இந்த ஏவுகணை, கம்ப்யூட்டர் முறைகளுடன் கூடிய நவீன தொழில் நுட்பம் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளைக் கொண்டது.”அக்னி-3′ ஏவுகணை முதன் முறையாக 2006 ஜூலை 9ம் தேதி சோதனை செய்யப் பட்டது. அதன்பின் 2007 ஏப்ரல் 12 மற்றும் 2008 மே 7 ஆகிய தேதிகளில் பரிசோதிக்கப்பட்டது.

ஹெய்ட்டியில் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் முப்பது இளம் சிறார்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல முயன்ற அமெரிக்கர்கள் குழு ஒன்றை ஹெய்ட்டி அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர்.

இந்த சிறார்கள் நிலநடுக்கத்தால் அனாதையானர்கள் என்பதற்கானா ஆதாரமோ அல்லது வெளிநாட்டு கொண்டு செல்வதற்கான அனுமதியோ இந்த பத்து அமெரிக்கர்களிடம் இல்லை என ஹெய்ட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் அமெரிக்காவில் உள்ள தேவாலயம் ஒன்றை சேர்ந்தவர்கள் என்று கூறும் இந்த குழுவினர், அண்டைய நாடான டோமினிகன் குடியரசில் தாங்கள் அனாதை ஆசிரமம் ஒன்றை நிறுவ திட்டமிடுவதாக தெரிவித்துள்ளனர்.

தத்து எடுப்பது தொடர்பில் ஹெய்ட்டி புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பெற்றோர் இல்லாத குழந்தைகளை கடத்தி அவர்களை தத்தெடுப்பவர்களுக்கு விற்பது, வீட்டு வேலை செய்ய விற்பது அல்லது பாலியல் அடிமைகளாக விற்பது போன்றவை இடம்பெறலாம் என்ற அச்சம் அதிகரித்த பின்னர் இந்த கட்டுப்பாடுகள் வந்துள்ளது.

மறுபடியும் ஒசாமா பின் லேடனின் வீடியோ செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த முறை புதிய தீவிரவாதத் தாக்குதல் குறித்து லேடன் பேசவில்லை. மாறாக, புவிவெப்ப மாற்றம் குறித்து பேசியுள்ளார் லேடன்.

அமெரிக்காதான் புவிவெப்ப மாற்றத்திற்கும், உலகில் வெப்ப நிலை அதிகரித்துள்ளதற்கும் காரணம் என்று பாய்ந்துள்ளார் லேடன்.

இதுகுறித்து அந்த வீடியோசெய்தியில் லேடன் கூறுகையில், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கும், புவிவெப்ப அதிகரிப்புக்கும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும்தான் காரணம்.

மூன்றாவது உளக நாடுகளில் அதிகரித்து வரும் வெள்ளம், பட்டினி, பஞ்சம், காடுகள் அழிவது ஆகிய அனைத்துக்கும் அமெரிக்காதான் காரணம்.

புவிவெப்ப மாற்றம் குறித்து விவாதிப்பது மிகவும் அவசியமானது. ஆடம்பர நாடுகளின் வசதிக்கேற்ப இதைப் பேச முடியாது.

அமெரிக்க பொருளாதாரத்தின் அச்சாணியை முறிக்க வேண்டும். அதற்கு அமெரிக்க டாலரையும், அமெரிக்க பொருட்களையும் உலக மக்கள் புறக்கணித்து ஒதுக்க வேண்டும்.

இதனால் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் ஆக்கிரமித்து போர் நடத்தி வரும் அமெரிக்க ராணுவம் பெரும் பாதிப்பை சந்திக்கும். இதன் மூலம் அமெரிக்காவின் அடிமைத் தளையிலிருந்து இந்த நாடுகளை மீட்க முடியும் என்று கூறியுள்ளார் லேடன்.

அல்ஜசீரா டிவி இந்த செய்தியை ஒளிபரப்பியுள்ளது. வழக்கம் போல இது உண்மையிலேயே பின் லேடன்தானா, அல்லது போலியா என்ற வாதமும் பின்னாலேயே கிளம்பியுள்ளது.

பரவி வரும் ஆபாச இணையதளங்களை தடுத்தி நிறுத்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் சைபர் சட்ட அமலாக்க திட்டம் மற்றும் தேசிய அளவிலான விவாதக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘ஆபாசமான, அருவருப்பான படங்கள் மற்றும் விரும்பத்தகாத விஷயங்களை வெளியிடும் இணையதளங்களுக்கு அரசு தடை விதிக்கலாம்.

பல்வேறு ஆக்கப்பூர்வமான காரணங்களுக்காக இணையதளங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவை அசிங்கமானவற்றுக்காகவும் இயங்குகின்றன.

பல நேரங்களில் பல ஆசிரியர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் போன்றோரின் அறிவுசார் சொத்துரிமை பறிக்கப்படும் சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.

நிதி தொடர்பான முறைகேடுகள், வணிக ஏமாற்று வேலைகள் என ஏராளமான குற்றங்களின் தளமாக பல இணையதளங்கள் பயன்படுவதை பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம்.

எனவே, சைபர் குற்றத்துக்கு எதிரான சட்டத்தை இயற்றும் போது இணையதள பயனாளிகளை தனி நபர், சேவை வழங்குவோர், இணையதளத்தை இயக்குவோர் என பயன்படுத்துவோரை பகுத்து ஆராய்ந்து தனித்தனி சட்டங்களை அமலாக்க வேண்டும்.

பல அப்பாவி பயனாளிகள் அசிங்கமான இமெயில்கள் சம்மந்தமில்லாத நபர்களிடமிருந்து வரும்போது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.

வேலை மற்றும் திருமணத்துக்காக பலர் அப்பாவித்தனமாக தங்களின் உண்மையான தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்கின்றனர்.

ஆனால் அந்த தகவல்கள் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. தேவையற்ற வணிக தொடர்பான இமெயில்கள் ஒருபுறமிருக்க, இளம் வயதினரின் பாலினம் குடும்ப பின்னணி போன்றவற்றின் தகவல்கள் தீய நோக்கத்துடன் உபயோகப்படுத்தப்படுகின்றன’ என குறிப்பிட்டார்.

சைபர் குற்றங்களை சமாளிக்க தனி சட்டம்:

இதேபோல, சைபர் குற்றங்களை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி வலியுறுத்தியுள்ளார்.

கூட்டத்தில் அமைச்சர் வீரப்ப மொய்லி பேசுகையில்,

‘சைபர் குற்றங்களை தடுக்க தற்போதுள்ள தகவல்தொழில் நுட்ப சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதால் தீர்வு கிடைக்காது. அதற்கென பிரத்தியேகமான தனி சட்டம் இயற்றப்பட வேண்டும்.

மேலும் சைபர் குற்ற விவகாரங்களை கண்காணிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தகுதி வாய்ந்த தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வெறும் சட்டங்களை இயற்றுவதன் மூலம் மட்டுமே இவ்வகை குற்றங்களை தடுத்துவிட முடியாது. அவை நிறுவனங்களை அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் அமைந்து விடக் கூடாது.

சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை திறமையாக அமலாக்கவும், கையாளவும் தனி அமைப்பை உருவாக்குவதே பலன் தரும். அந்த அமைப்பில் திறமை வாயந்தவர் இடம் பெற வேண்டும்.

அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகள் இத்தகைய அமைப்பை கொண்டிருக்கின்றன. சைபர் குற்றங்கள் இந்தியா எதிர்கொள்ளும் புது சிக்கல்கள் என்பதால் இங்கு அனுபவமும், திறனும் வாய்ந்த நிபுணர்கள் குறைவு.

தனியார் நிறுவனங்கள் கூட சைபர் குற்றங்களை எதிர்கொள்வதில் திணறிக்கொண்டு தான் இருக்கின்றன. எனவே சிறப்பு பயிற்சியும், தகுதியும் பெற்ற நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தியாக வேண்டும்’ என்றார்.

எரிபொருள் ஒருபுறம் தீர்ந்து வருகிறது. மறுபுறம் மாசு பெருகி வருகிறது. எரிபொருளின் தேவையையும் பூர்த்திசெய்து, மாசையும் கட்டுப்படுத்துகிறது ஒரு பாக்டீரியா. அதிசயமாக இருக்கிறதா!
காற்றில் கார்பன்-டை-ஆக்சைடு அளவு அதிகரிப்பதால் மாசு பெருகி உள்ளது. இந்த கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி பெட்ரோலாக வெளியிடுகிறது இந்த பாக்டீரியா. இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

சையனோபாக்டீரியம் என்ற பாக்டீரியாவில் நுண்ணுயிரியில் விஞ்ஞானிகள் செயற்கையாக சில மாற்றங்களை ஏற்படுத்தினர். இதற்காக பாக்டீரியாவில் ருபிஸ்கோ என்னும் நொதி சேர்க்கப்பட்டது. அதன்பிறகு இந்த பாக்டீரியாக்கள் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசித்து, இசோப்புட்டால்டிகைடு என்ற வாயுவாக வெளியிடுகிறது. இதை எளிமையாக மாற்றி இசோப்புட்டனால் என்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இது பெட்ரோலுக்கு சிறந்த மாற்று எரிபொருளாகும்.

இதுவரை தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளில் இருந்து மாற்று எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு மாற்றங்களைத் தாண்டி எரிபொருள் கிடைக்கும். ஆனால் இந்த பாக்டீரியா முறையில் எளிமையாக குறைந்த செலவில் சிறந்த எரிபொருளை உற்பத்தி செய்ய முடிகிறது.

இதன் மேலும் ஒரு சிறப்பம்சமாக, இந்த பாக்டீரியாக்கள் சூரிய ஒளியை கிரகித்தும் எரிபொருளை உற்பத்தி செய்துவிடும். அதாவது சூரிய ஒளியில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை பிரித்து பிறகு அதை இசோப்புட்டால்டிகைடாக மாற்றும்.

எனவே இந்த பாக்டீரியாக்களைக் கொண்டு இரட்டை வழியில் நிறைய பெட்ரோல் தயாரிக்க முடியும். இதனால் கூடுதலான பாக்டீரியாக்களை உற்பத்தி செய்வதில் விஞ்ஞானிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
மிகவும் வித்தியாசமான இந்த முறை, மாசுகளையும் கட்டுப்படுத்த உதவும் என்பதால் விரைவில் உலகம் முழுமைக்கும் பரவிவிடும் என்று எதிர்பார்க்கலாம்!

தேடித்தந்தவர்-சிராஜ்

ஆங்கிலத்தில் -  TimesOnline

THANKS TO : TNTJ http://www.tntj.net/?p=9505

சினிமாவே அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணமாக இருப்பதாக மதுரை ஐகோர்ட் நீதிபதி வி.தனபாலன் வேதனை தெரிவித்தார். திருச்சி முசிறியில் ஒரு மாணவர் அரசு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். தீபாவளியன்று பள்ளி வளாகத்தில் நண்பருடன் மது அருந்தியதாக, அம்மாணவரை வகுப்பில் அனுமதிக்க தலைமையாசிரியர் மறுத்து விட்டார்.

இதை எதிர்த்து அம்மாணவரின் தந்தை ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்தார். தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி,””மாணவர் செய்த தவறை இன்னும் உணர்ந்ததாக இல்லை. அவருடைய எதிர்கால வாழ்வு பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் இன்னும் அவரை பள்ளியை விட்டு நீக்கவில்லை,” என்றார். இவ்வழக்கு நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி கூறியதாவது: மாணவன் பிளஸ் 1 வரை நல்ல முறையில் படித்துள்ளார். அவரது வருகை பதிவேடும் நன்றாக உள்ளது. தற்போது இத்தகைய குற்றங்களுக்கு காரணம் அவருடைய வயது. இதற்கு முழு காரணம் சினிமா தான். சில சினிமாக்களில் உள்ள கதாநாயகர்கள் போல் தங்களை பாவித்து இளைஞர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். சினிமா ஒழிந்தால் இத்தகைய பிரச்னைகள் ஒழிந்து விடும். சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா. இது என் தனிப்பட்ட கருத்து. என்று தெரிவிவத்தார்.

-வெப்துனியா

SOURCE : http://www.tntj.net/?p=10204

பிரிட்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று தனது வாடிக்கையாளர்கள் எத்தகைய உடைகளை அணிந்து வரலாம் என்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேல்சின் கார்டிபில் இருக்கும் டெஸ்கோ நிறுவனத்தின் அங்காடி ஒன்று, தனது வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஷூக்களை அணிந்து வர வேண்டும். பைஜாமாக்களை அணிந்து வரக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

ஆடை அணிவது குறித்து உறுதியான விதமுறை ஒன்றையும் தான் விதிக்கவில்லை என்றும் ஆனால் இரவு நேரங்களில் அணியும் உடைகளில் வாடிக்கையாளர்கள் சிலர் வந்தால் மற்ற வாடிக்கையாளர்கள் எரிச்சலடையக் கூடும் என்பதால் இந்த நடவடிக்கை என்று டெஸ்கோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

வங்கி இல்லாத ஊர்களிலும் வங்கிச் சேவையை வழங்கும் நோக்குடன் இந்தியன் வங்கி சார்பில் ஸ்மார்ட் கார்டு என்ற மின்னணு அட்டை புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

நாட்டிலேயே முதன் முதலாக புதுச்சேரியில் உள்ள செட்டிப்பட்டு கிராமத்தில் முகவர்கள் மூலம் வங்கிச் சேவை வழங்கும் இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப உதவி அளித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் வி.எஸ்.தாஸ் இந்த ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில், “வங்கி வசதியற்ற, வங்கி குறைவான பகுதிகளில் வங்கித் தொடர்பாளர் என்கிற முகவர்களுக்கு இந்தியன் வங்கி அனுமதி அளிக்கும். இவர்கள் வங்கியின் சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனைக்கான அதிகாரம் பெற்ற பிரதிநிதிகளாக செயல்படுவர்.

அந்தப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்கள், மளிகைக் கடைகள், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள், பொது தொலைபேசி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் போன்றவை வங்கித் தொடர்பாளர்களாக பணியாற்றலாம்.

வங்கித் தொடர்பாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வங்கிச் சேவை வழங்க வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டை பயன்படுத்துவதற்கான கருவியை வங்கித் தொடர்பாளர் வைத்திருப்பார்.

இக் கருவி மூலம் முகவரிடமே பணம் செலுத்தலாம், பெறலாம். பணம் பெறும்போதும், செலுத்தும் போதும் உடனடியாக ரசீது (தமிழ் மற்றும் ஆங்கிலம்) வழங்கப்படும்.

அப்போது எவ்வளவு பணம் எடுக்கப்பட்டது மற்றும் செலுத்தப்பட்டது என்று கருவியில் குரல் ஒலிக்கும். இதனால் வாடிக்கையாளரை வங்கித் தொடர்பாளர்கள் ஏமாற்ற வாய்ப்பில்லை. எல்லா பணப் பரிமாற்றமும் இணையம் சார்ந்து இருப்பதால், அவை உடனடியாக வாடிக்கையாளர் கணக்குகளில் பதிவு செய்யப்படுகிறது. வங்கி கிளைகளிலும் இந்த கார்டைப் பயன்படுத்தலாம்.

பாமர மக்கள், சிறிய அளவிலான தொகையை பாதுகாப்பாக செலுத்தி, எடுக்க விரல்பதிவு முறையில் இந்த சேவை இயக்கும். வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு அருகிலேயே இந்த சேவை கிடைக்கும். அவர்கள் நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு வங்கிக் கிளைகளுக்கு செல்லவேண்டியதில்லை” என்றார்.

1984ம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தை நாடு கடத்திய வழக்கில் தொடர்புடைய பர்மீந்தர் சிங் சைனி கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

46 வயதாகும் சிங் உள்பட ஐந்து சீக்கியர்கள், 1984ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி ஸ்ரீநகரிலிருந்து டெல்லி சென்ற விமானத்தை கடத்தினர்.

அதன் பின்னர் ஐந்து பேரும், பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். அங்கு ஐந்து பேருக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. இருப்பினும் பின்னர் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

அதன் பேரில் அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1995ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்தார் சிங்.

பல்பீர் சிங் என்ற பெயரில் கனடாவுக்குச் சென்றார். போலியான ஆப்கன் பாஸ்போர்ட்டைத் தயாரித்து அதன் மூலம் கனடாவுக்குத் தப்பினார்.

கனடாவில் இருந்தபோது பி.ஏ. மற்றும் சட்டப் படிப்பை படித்தார். பின்னர் தான் வக்கீலாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு கனடா அரசிடம் விண்ணப்பித்தார்.

ஆனால் அவருடைய கடந்த கால வரலாறு தெரிய வரவே அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த காலத்தில் செய்த தவறுக்கு வருந்துவதாகவும், திருந்தி வாழ விரும்புவதாகவும் கோரினார் சிங். இருப்பினும் இது நிராகரிக்கப்பட்டது. நேற்று அவர் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

சமச்சீர் கல்வி திட்டப்படி புதிய பாட நூல்கள் தயாராகி உள்ளன. இவற்றை ஆய்வு செய்து, பொருளடக்கத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை முதல்வர் கருணாநிதி வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி சமச்சீர் கல்வி பாடநூல்கள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில திட்டக் குழு துணைத் தலைவர் மு.நாகநாதன், எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கோ.சத்ய கோபால் உட்பட பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரான முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாட நூல்கள் முதல்வர் கருணாநிதியின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

பாட புத்தகத்தில் உள்ள பொருளடக்கம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி ஆய்வு செய்து, விவாதித்து தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அடுத்த பக்கம் »